போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம்
1
மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது?
சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள்.
சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள்.
வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள்.
மேற்கு அரசுகளுக்கு தொலைந்து கொண்டிருந்த தெற்காசிய நலன் ஓன்று மீளத் தொடங்கிய நாள்.
சீனாவுக்கு தன் நலனுக்கு ரோட்டுப் போட்ட நாள்.
கூட்டமைப்புக்கு ‘கூட்டுக்கு’ ஒரு புது அர்த்தம் பிறந்த நாள்.
புலி எதிர்ப்பாளர்களுக்கு புலிகளை முடித்து வைத்த புனித நாள்.
புலிகளுக்கு ஆயுதம் மொளனித்த நாள்.
ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு தங்கள் சொந்தங்கள் சொத்துக்களை இழந்த நாள். மேலும் ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு தமது வாழ்வாதாரம் மற்றும் உடல் உறுப்புகளை இழந்த நாள். தெற்காசிய அதிகாரங்களின் மோதல் ஒரு படுகொலையை நிகழ்த்தி மறைத்த நாள்.
இடதுசாரிகளுக்கு இது ‘முடிந்த நாள்’ இல்லை. போராட்டம் தொடரும் அவசியம் பலப்பட்ட நாளும். வீழ்ந்தவர்களை எண்ணி –நடந்த இனப் படுகொலை எண்ணி எல்லார் மனமும் வருந்தும். பாதிக்கப் பட்ட மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி நினைத்துக் கொள்வர். மக்களுக்கான விடுதலை பற்றிப் பேசுவோர் அந்த நினைவோடு நின்று விட முடியாது. மக்கள் போராட்டம் நோக்கித் திரும்ப வேண்டும் – அவர்களின் எழுச்சி நிகழ வேண்டும். இந்த நோக்கில் இந்த நாளை வெறும் வீழ்ச்சியும் –அழுகையுமாக நிகழ்த்துவதை நாம் எதிர்க்கிறோம். கொல்லப்பட்டோரை நினைப்பது என்பது அழுவதற்கு மட்டும் அல்ல. கொலைக்கு காரனமானவர்களை பழிவாங்குவோம் எனச் சூளுரைக்கும்/ பழிவாங்கும் நோக்கு அல்ல. மாறாக கொலைக்கு காரணமான அரசியலைத் துடைத்து எறிந்து –கொலைக்கு காரணமானவர்களை அரசியல் ரீதியாக தோற்கடித்து –மக்களை விடுதலை நோக்கி நகர்த்தும் நோக்கு இந்த நினைவில் இருக்கிறது. இதனால்தான் வெறும் நினைவாக மட்டும் இந்த நிகழ்வு சுருங்குவதை மறுக்கிறோம்.
2
முள்ளிவாய்க்கால் நிகழ்வும் –கொடி விவகாரமும்
இந்த நிகழ்வை நடத்துவதை ஆரம்பத்தில் இருந்தே பல சக்திகள் எதிர்த்து வருகின்றன. வீழ்வோம் என்று நினத்தாயோ என்ற கோசத்துடன் –விழுந்த இடத்தில் இருந்து எழுவோம் என்ற வீறாப்புடன் போராட்டம் நோக்கி நகரும் நிகழ்வு தமிழ் நாட்டில் மட்டுமே பலப் பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தில் இந்த நிகழ்வை நடத்த அரச தடை – பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்தன. இளையோருக்கும் மக்களுக்கும் இந்தபிரச்சினை இருப்பினும் –தமிழ் பாராளுமன்ற தலைமைகளுக்கு அந்தளவுக்கு பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இந்த நினைவு மீன்டும் போராட்ட உணர்வை தூண்டும் என்ற உள்மனப் பயம் அவர்களுக்கு உண்டு. இது தவிர அவர்களுக்கு தமது மேற்குலக நட்பை பகைக்காது இயங்க வேண்டும் என்ற மனக்கவலை முள்ளிவாய்க்கால் அழிவு பற்றிய கவலையை விட அதிகம். சிவாஜிலிங்கம் போன்ற துணிந்த கட்டைகள் மட்டும் தன்னந் தனியாக நின்று கத்த விடப்பட்டார்கள். இதற்குள் சிவாஜிக்கு விசர் என்ற பொய் பிரச்சாரங்கள் வேறு.
இதையும் மீறி பல இளையோர் படுகொலை மறக்க முடியாது எனப் பதியும் நடவடிக்கைகளில் இயங்கி வந்தனர். அதன் தொடர்ச்சிதான் மாணவர்களும் இளையோரும் இந்த நிகழ்வை தாமே நடத்த வேண்டும் என முன் வரக் காரணமாயிற்று. இந்த ஆண்டு மேலதிக ஒழுங்கமைவுகள் நிகழ்ந்ததற்கு பின்னால் இருந்த முக்கிய அமைப்புக்களில் ஓன்று- ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் என்ற அமைப்பு. இந்த அமைப்பு அரசியல் எழுச்சியாக இந்நிகழ்வு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இயங்கி வருவதும் – நிகழ்வுக்கு முன் அந்தக் கோரிக்கையுடன் ஆயிரக் கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததும் குறிப்பிடத் தக்கது. மக்கள் எழுச்சியாக நடத்த திட்டமிட்டதை மட்டுப்படுத்த வடமாகான சபை தலையிட்டதும் நிகழ்ந்தது. அது ஒரு பின்னடைவே. இந்த அர்த்தத்தில் கருணாநிதி 2009ல் செய்ததை விக்னேஸ்வரன் 2018ல் செய்திருக்கிறார். மாணவர்கள் வட மாகான சபைக்கு விட்டுக் கொடுத்தது தவறு. அவர்கள் அதை மறுத்திருக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக ஒரு நிகழ்வாக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் விட்டுக் கொடுத்து விட்டார்கள். இது தவறு. அரசியற் பலவீனம். இத்தகைய ‘வானவில்’ ஒற்றுமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்க முடியாதவை. நிறம் பிரிந்து உடைந்தே ஆகும். அடுத்த முறை வட மாகாண சபை இந்த நிகழ்வை அரசின் அதிகார பூர்வ நிகழ்வாக்கி மக்களை தூரத்தில் வைக்கும் என்ற பயம் மாணவர்களுக் உண்டு. வட மாகான சபையின் கோரிக்கையை ஏற்ற அவர்கள் வெளியிட்ட அறிக்கை அதை தெளிவாக காட்டுகிறது. அது நியாயமான பயமே. தமது கையில் இருந்து அவர்கள் நழுவ விடுவார்களானால் அதுதான் நடக்கும். அதன்பின் பிரிந்து பிரிந்து நிகழ்வு நடத்த வேண்டித்தான் வரும். இப்போதே தமது பலத்தை தளர விடாது மாணவர்கள் தனித்துவமான பலம் நோக்கி நகர முற்பட்டிருக்க வேண்டும்.
‘அவர்கள்’ நடத்தினால் எப்படி இருக்கும்? இன்று பிரித்தானியப் பேரவை எவ்வாறு இந்நிகழ்வை நடத்துகிறதோ அப்படித்தான் இருக்கும். பி.டி.எப் தான் இந்நிகழ்வை இங்கிலாந்தில் முதன் நடத்த தொடங்கியது. டி.சி.சி மற்றும் நாடு கடந்த அரசுக்கு இதை நடத்தும் பலம் அப்போது இருக்கவில்லை. ஆயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். 2010ல் 50 000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொடிருப்பார்கள் என நினைக்கிறேன். மக்கள் திரண்டு வந்தது வெறும் நினைவுக்காக மட்டும் அல்ல. அடுத்து என்ன என அறியவுமே.
ஆனால் நாம் என்ன செய்தோம்?
மக்களை பத்து அடி தள்ளி நிற்கச் சொன்னோம். மேடைகள் கட்டினோம். மேடைகளில் மோசமான வலதுசாரிய அரசியல் வாதிகளை ஏத்தினோம். தமிழர் பாவம் என அவர்களும் போலிக் கண்ணீர் வடித்து விட்டு சென்றனர். அவர்களுக்கு தமது வாக்கு வங்கியை தக்க வைக்கும் ஒரு செயல் தான் இது. சிரியாவில் குண்டு போட வாக்குப் போட்டு விட்டு – அங்கு குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப் படுவதை பார்த்தும் பார்க்காமல் – கொலைச் சூடு ஆற முதலே மனித உரிமை பற்றி போலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இதே வறட்டு வலதுசாரிகல்தான் மனித உரிமை சட்டம் இங்கிலாந்தில் ரத்துச் செய்யப் பட வேண்டும் எனக் கடுமையாக வாதிடுபவர்கள்.
நிகழ்வுக்கு வந்தோம் – பூவைப் போட்டம் –பிறகு லூசுக் கதைகளைக் கேட்டம் -வீட்ட போனம் என்ற போக்கில் மக்கள் தொடர்ந்து வர முடியுமா? இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அர்த்தங்கள் சுருங்கி தற்போது கலந்து கொள்வோர் எண்ணிக்கை சில நூறுகள் என வந்து நிற்கிறது. இதற்கு மக்கள் பொறுப்பில்லை. புலிகளின் கொடியை ஏற்றுவதால்தான் மக்கள் கலந்து கொள்கிறார்கள் இல்லை என்ற பேச்சும் ஒரு சமயம் பரப்பப் பட்டது. பி.டி.எப் ன் தலைமைகள் இந்த பேச்சை நேரடியாக் பேசாவிட்டாலும் அவர்கள் புலிக்கொடி நிகழ்வில் பிடிப்பதை தடை செய்தனர். மேற்கு அரசுகள் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுடன் பேச வேண்டும் என்ற சமரசம் இந்த தடையின் பின் இருந்ததை பலர் ஏற்றுப் பேசி இருக்கின்றனர்.
இதை தமிழ் சொலிடாரிட்டி கடுமையாக எதிர்த்தது. தற்போது இலங்கை அரசுடனும் பேசத் தயாராகிக் கொண்டிருக்கும் அவர்கள் புலிகளின் கொடிக்கான முழு மறுப்புடன் இயங்கி வருகின்றனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இதை எதிர்த்து முன்பு ஒரு கலவரத்தை நிகழ்த்தியது. தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருந்தது. புலிகள் இயக்க அடையாளமுள்ள கொடி தேசியக் கொடி இல்லை என்பது வேறு விசயம். ஆனால் டி.சி.சி சொல்வதற்கு மாறாக புலிகளின் கொடியையும் எதிர்ப்பு அடையாளமாக இங்கு பாவிக்க முடியும் என்று நாம் பேசி இருந்தோம். ஐ,பி.சி தொலைக் காட்சியில் இது பற்றிய விவாதத்தின் போது தமிழ் சொலிடாரிட்டி தமது நிலைப்பாட்டை தெளிவாக வைத்திருந்தது. மேற்கு அரச சக்திகள், இந்திய அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் உறவுக்காக போராட்ட சக்திகளை – போராட்ட உணர்வை முடக்குவது கடுமையாக எதிர்க்கப் பட வேண்டும். புலிகளின் கொடி அவர்களுக்கு உவப்பானதல்ல என்ற காரணத்தால அதற்கு ஒரு புது எதிர்ப்பு அடையாளத்தை –புதிய தலைமுறை உணர்கிறது. அதை நாம் ஆதரிக்கிறோம் – அந்த உரிமைக்காக எம் குரல் எழும் என தெளிவாக சொல்லி இருந்தோம்.
எவாறு மக்களின் கொலைக்கு காரணமான சக்திகளோடு சமரசத்தோடு இந்நிகழ்வு நிகழ்கிறதோ அதே போல்தான் இலங்கையிலும் மாறி நடக்க வாய்ப்புண்டு – அந்த நிலை வர விடக்கூடாது மாணவர்கள். சமரசமற்ற அரசியல் யுத்த குணம் இதற்கு வேண்டும். வெறும் ஒற்றுமைப் புனித கதைகளுக்கு எடுபட்டு ஏமாந்து விடக் கூடாது.
டி.சி.சி இந்த நிகழ்வை பி.டி.எப் இடம் இருந்து பறித்து விடும் நோக்கத்துடன் இயங்கியதே தவிர இதை மக்கள் எழுச்சி நிகழ்வாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கவில்லை. கொடி பிடிப்பது பற்றி நாம் என்ன சொல்கிறோம் என இன்றுவரை இவர்களுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை. புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் இயக்க அடையாளங்களை பாவிப்பதற்கு ஐரோப்பாவில் தடை உண்டு. இதை தமிழ் சொலிடாரிட்டி சரி என ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகைய அனைத்து அரசியற் தடைகளையும் நாம் எதிர்க்கிறோம். தடையையும் மீறி நாம் இயங்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
ஆனால் ஒரு இயக்கம் தனது அடையாளங்களை ‘மக்களின் அடையாளமாக’ திணிப்பதையும் நாம் எதிர்க்கிறோம். மக்கள் போராட்டத்தைக் கட்ட முன் வரும் எந்த அமைப்பும் ‘நாம்தான் மக்கள்’ என்ற பாவனை செய்வது மிகப் பெரும் தவறு. அந்த அடிப்படையில் மக்களை அரசியல் ரீதியாகத் திரட்ட முடியாது. முள்ளிவாய்க்கால் நிகழ்வு விடுதலைப் புலிகள் மட்டும் சார்ந்த விசயம் இல்லை. ஆனால் முள்ளிவாய்க்காளில் அழிக்கப்பட்ட புலிகளை மறந்து அல்லது ஒதுக்கி இந்த நிகழ்வு பற்றி பேசவோ – நடத்தவோ முடியாது. ஆயிரக்கணக்கான இளையோர் – மக்கள் விடுதலைக்காக என்ற நோக்கில் புதைக்கப்பட்டதை மறைத்து இயங்க முயல்வது மிகப் பெரிய தவறு. எப்படியாவது புலிகளின் வரலாற்றை முடிப்பதன் மூலம் போராட்ட கதையாடலையே முடித்து விட வேண்டும் என நினைக்கும் வலது சாரி சக்திகள் –மற்றும் தம்மை தாமே புத்தி சீவிகள் எனக் காட்டிக் கொள்ளும் போலி போதாமைகள் புலிகளை எப்படியாவது வரலாற்றில் புதைத்து விட துடிக்கிறார்கள். அவர்களுக்கும் எதிர்ப்பு என்ற எமது போராட்ட நிலைப்பாடுதான் எமது. அந்த அர்த்ததில் புலிகள் அமைப்பினர் புலிக்கொடி பிடிக்கும் உரிமைக்காக கடுமையாக பேசவும் இயங்கவும் செய்வோம். இதனால் கடந்த போராட்ட கால கட்டத்தில் நிகழந்த தவறுகள் மற்றும் அரசியல் முன்னோக்குப் பிழைகள் எல்லாவறையும் நாம் தத்தெடுக்கிறோம் என சுருக்கிப் பார்ப்பது தவறு. இதை விளக்கத்தான் நாம் போராட்டத்தின் தொடர்ச்சி எனப் பேசுகிறோம். போராட்ட வரலாறு அதன் தவறுகளால் முழுமையாக புதைக்கப்பட்டு பின்பு ஒரு புனிதமான போராட்டம் எழும் என்ற அரசியல் விளக்கமற்ற கதைகளை நாம் பேசுவதில்லை. போராட்டத்தின் தொடர்ச்சிதான் நாம். ஆனால் அனைத்து பிழைகளையும் தத்தெடுத்தவர்கள் அல்ல. மாறாக தொலைதூர பார்வை உள்ள அரசியல் முன்னோக்கு நோக்கி நகர்பவர்கள்.
இந்தப் புள்ளியை நீங்கள் மிக அவதானமாக கவனிக்க வேண்டும். அதிகாரங்களுக்கு எதிர் என்ற நிலைப்பாடுதான் சில இலச்சினைகளை – கொடிகளை –வரலாற்றில் புதிப்பிக்கிறது. பழைய ‘நினைவு’ என்ற ஒற்றை காரணத்துக்காக புதிய தலைமுறை எதிர்ப்பு அரசியல் நோக்கி நகர்வதில்லை. மாறாக இது ஒரு அரசியல் அடிப்படையில் நிகழ்கிறது. நாம் எதிர்ப்பு கட்டும் போராளிகள் என ஒரு பக்கம் காட்டிக் கொண்டு –மறு பக்கம் அனைத்து அதிகார சக்திகளினதும் கால்களை நக்கும் செயலைச் செய்வது என்ன நியாயம்?
போராட்ட அரசியல் பற்றிய தெளிவு எமக்கு வேண்டும்.
மாவீரர் நாளை நடத்துவதுபோல் முள்ளிவாய்க்கால் நிகழ்வையும் நடத்த முடியாது. மாவீரர் நாளில் கூட புலிகள் அமைப்பு தமது அரசியல் நிலைப்பாடு – அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி உரை வழங்கும் வழிமுறை இருந்தது. குறைந்த பட்சம் இதை முள்ளிவாய்க்காள் நிகழ்விலாவது நாம் பேசியாக வேண்டும். டி சி சி என்ற ஒரு அமைப்பின் நிகழ்வு அல்ல இது. பி டி எப் இந்த நிகழவை நடத்தும் முறை பற்றி கடுமையான எதிர்ப்பை தமிழ் சொலிடாரிட்டி முன் வைத்த போதும் அவர்கள் இந்த நிகழ்வை நடத்த இருக்கும் உரிமை பற்றி கேள்வி கேட்டதில்லை. மக்கள் அத்தகைய சமரச நிகழ்வுகளுக்கு செல்லவேண்டாம் போராட்ட அரசியல் நோக்கித் திரளுங்கள் என்ற கோரிக்கைதான் நாம் மக்கள் முன் வைக்கும் பிரச்சாரம். இது நோக்கித் திரளும் மக்கள் கூட்டம் ஒரு சிறுபான்மைதான் என்ற தெளிவோடும்தான் நாம் இயங்குகிறோம். அதை மாற்றி அமைக்க வேண்டியதும் புதிய தலைமுறை இளையோரைத் போராட்டத்துக்கு திரட்டுவதும் எமது கடமை.
ஒரு 500 பேர் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு சுருங்கி நிற்பதை நாம் மறுத்து –அதை மாற்றி போராட்ட திரட்சி நிகழ்வாக இந்நிகழ்வு அமைய வேண்டும் என்பது எமது அவா.
3
போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன?
அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள்.
அதிகார சக்திகளின் சின்னங்களை புறந்தள்ளுங்கள். புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மரியாதையை செலுத்தும் நிகழ்வையும் இணையுங்கள் – அதுதான் முதன்மை என அது மட்டுமே நிகழ்வாக நடத்தாதீர்கள்.
மக்கள் விடுதலைக்கான உங்கள் நிலைப்பாடு என்ன என மக்களுக்கு தெரிவுக்கும் படி மக்கள் மத்தியில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புக்களையும் அழையுங்கள். அடுத்த கட்ட அரசியல் நடைமுறைகள் என்ன என்பது மக்களுக்கு தெரிய வரட்டும்.
மக்கள் இந்த நிகழ்வுக்கு வர ஒரு காரணம் வேண்டும். இங்கு வருவதன் மூலம் கொலை நிகழ்த்த வரலாறை – அதற்கு காரணமான அரசியலை – அரசியல் சக்திகளை மக்கள் நினைவு கொள்ளட்டும். அதே சமயம் மக்கள் விடுதலை பேசும் அமைப்புக்கள் என்ன செய்கின்றன –அடுத்து என்ன செய்யப் போகின்றன என்ற விபரங்களையும் அவர்கள் தெரிந்து செல்லட்டும். தாம் செய்யும் அரசியலில் குறைந்த பட்ச தன்னம்பிக்கை உள்ள எந்த அமைப்பும் இதை செய்ய பின் நிற்கப் போவதில்லை. எதுக்கு இயங்குகிறோம் என்ன செய்கிறோம் என்ற எந்த அரசியல் தெளிவும் அற்ற அமைப்புக்கள்தான் பதுங்கி பின் நிற்கும். வாருங்கள் மக்கள் முன் பேசுவோம்.
4
அதிகார சக்திகளின் அடையாளங்களுடன் என்ன பிரச்சினை?
இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டிய நிலையும் இருப்பது நினைத்து நாம் வெட்கப்பட்டுத் தலை குணியவேண்டி உள்ளது. ஒரு போராட்ட சக்திக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறிவு இது. தனிமைப்பட்டு போய் விடுவோமோ என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படலாம். ‘அவற்றை காலைப் பிடித்து –இவற்றை கையைப் பிடித்து ஏதாவது வாங்கிறத வாங்குவம்’ என பல மக்கள் சிந்திக்கலாம். ஒரு போராட்ட அமைப்பும் அப்படி சிந்திக்க முடியாது. போராட அமைப்புக்கு அரசியல் வேண்டும் – தாம் எந்த அரசியல் நிலைப்பாட்டில் நிற்கிறோம் என்ற தெளிவு வேண்டும். சரியான முன்னோக்கும் அரசியல் திட்டமிடலும் வேண்டும். அதற்காக மக்களைத் திரட்ட வேண்டும்.
அடக்குமுறை அதிகார சக்திகளும் போராட்ட சக்திகளும் எதிர் எதிர் திசையில் நிற்பவை. ஒன்றின் அழிவில்தான் மற்றதன் வெற்றி சாத்தியம். மக்களின் அழிவு இன்றி புரட்சிகர அரசியல் மூலம் அதிகாரம் கைமாற வழியுண்டு. ஆனால் அழிவின் மூலமும் தனது அதிகாரத்தை தக்க வைக்க அதிகார சக்திகள் தயங்க மாட்டார் என்ற அறிதல் எமக்கு வேண்டும். ஈழத்தில் மக்களின் தேசிய விடுதலை என்பது அதிகார சக்திகள் இறக்கப்பட்டு தருவதால் அடையக் கூடியதல்ல. இராஜ தந்திரத்தால் அடையலாம் எனப் பேசுபவர்கள் அது என்ன தந்திரம் மந்திரம் என இன்றுவரை சொன்னது இல்லை. அதிகார அரசுகளுக்கு கால் பிடிப்பது ஓன்றும் ‘புத்தம் புதிய’ உத்தி இல்லை. தமது சொந்த லாப நோக்கில் இயங்குபவர்கள் காலம் காலமாக செய்துவரும் செயல்தான் அது. அதற்கு அதிகூடிய ‘அரசியல் ஞானம்’ தேவை இல்லை. சுய நலன் காக்கும் அக்கறை மட்டும் போதும். சமூகப் போராளி தனது சுயம் சார்ந்த எதையுமே துறக்க தயாராக இருப்பவர். இவர்கள் சமூக போராளிகள் இல்லை. பலமான மக்கள் போராட்டத்தைக் கட்டாமல் தமிழ் ஈழ விடுதலை சாத்தியமில்லை என அடித்துப் பேசுகிறோம். இல்லை என்றால் மாற்று வழிகளை விளங்கப் படுத்துங்கள். மக்களுக்கு எதிரான சக்திகளில் மாயையை உருவாக்கிக் கொண்டு எவ்வாறு மக்கள் போராட்டத் திரட்சியை ஏற்படுத்துவது? இந்த மர்மத்தை தயவு செய்து விளங்கப் படுத்துங்கள்.
புலிகள் அமைப்பின் கொடியை புதிய தலைமுறை புரிந்து கொள்ளும் விதம் ‘எதிர்ப்பின் அடையாளம்’ என்ற அர்த்தத்தில் இருக்கிறது. அது அவ்வாறு இல்லை –மாறாக பிரித்தானிய அதிகாரத்தின் நட்புச் சக்தியாக –அதற்கு நிகராக பார்த்தே இளையோர் வருகின்றனர் என வாதிடுகிறதா டி சி சி ? நீங்கள் அரசியலில் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்ற முடிவுக்கு முதல் வாருங்கள். காலைப் போராட்டத்தில் வைத்துக் கொண்டு தலையை அதிகாரத்திடம் அடகுவைத்த முறையில் இயங்க முடியாது. அவ்வாறு இருப்பதுதான் இத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது. போராட்ட அரசியல் பக்கம் நிற்பதாக பி டி எப் சொல்லவில்லை. அவர்களுடனான முரண் தெளிவானது. பதாகை பிடித்து மக்கள் திரள்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதில் பாதர் இம்மானுவல், சுரேன் சுரேந்திரன் போன்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கூட்டமைப்பின் தலைமையும் இதில் தெளிவாக இருக்கிறது. போராட்டம் எனப் பேசும் சக்திகள் முடக்கப் படவேன்டும் என்பதில் சுமந்திரன் நல்ல கவனத்தோடு வேலை செய்வார் என்பது தெரியும். நீங்கள் எந்தப் பக்கம்?
ஐரோப்பிய பாரளுமற்றத்தில் வலதுசாரி குழுவை நோக்கி பிரச்சாரிக்க காசைக் கொட்டி கரி ஆக்காதீர்கள் என பல தளங்களில் பேசினோம். கேட்டீர்களா ? என்ன சாதித்தீர்கள்? ஐக்கிய நாடுகள் சபைக்குள் மினக்கெடும் நேரத்தை மக்களை அரசியல் மையப் படுத்துவதில் செலவு செய்யலாம் எனச் சொன்னோம். வந்தீர்களா? வலதுசாரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பின் திரிவதால் என்ன சாதித்த்தோம்? இந்தக் கேள்விகளுக்கு விடை போராட்ட அரசியல் நோக்கி நகரும் திட்டமிடல் இன்றிச் சாத்தியமில்லை.
முள்ளிவாய்க்கால் நிகழ்வை தமிழ் சொலிடாரிட்டி செய்ய வேண்டும் என்ற குறுகிய மனப்பாங்கில் இந்தக் கேள்விகளை நாம் முன் வைக்கவில்லை. அப்படி சிறுமைத் தனமான அரசியல் எமக்கு இல்லை. அனைத்து அமைப்புக்களும் தமது அரசியல் முரணுடன் – அரசியல் சமரசம் இன்றி இந்த நிகழ்வை ஒழுங்கமைக்க முன்வந்தால் மிகவும் சந்தோசப் படுவோம். அமைப்புக்களிடம் இருக்கும் அரசியல் போதாமைதான் அதன் சாத்தியமின்மையை உருவாக்கி இருக்கிறது. பி டி எப் தனது அமைப்பின் நிகழ்வாக இதைக் குறுக்குவது போல்தான் டி சி சி யும் இதை அமைப்பின் நிகழ்வாக குறுக்குகிறது. இதை மக்களின் நிகழ்வாக – அனைத்து அமைப்புக்களும் கலந்து கொள்ளும் அரசியல் நிகழ்வாக ஒழுங்கமைக்க வேண்டும்.
ஆனால் டி சி சி யாருடனும் சேர்ந்து வேலை செய்ய முன்வருவதில்லை. அவர்களுக்குத் தங்களின் பலவீனம் தெரிவதில்லை. டி சி சி யின் நிகழ்வாக மட்டும் இருப்பின் வழமைபோல் ஒரு 300ல் இருந்து ஒரு 500 பேர் வரை பங்கு பற்றலாம். இதுவே மிகவும் கடின உழைப்போடுதான் ஒழுங்கமைக்க வேண்டி இருக்கிறது. அப்படி இருக்க இதைத்தாண்டி மக்களை நோக்கி நகர்வது எப்படி? போராட்ட அரசியலை மக்களுக்கு கொண்டு செல்வது எவ்வாறு ? இதுதான் தமிழ் சொலிடாரிட்டியின் முக்கிய கவலை. போராட்ட அரசியலை முதன்மைப்படுத்தி, சனநாயக ரீதியில் மற்றைய அமைப்புக்களையும் இனைத்து செயற்பட முன் வந்தால் தமிழ் சொலிடாரிட்டியின் முழு ஆதரவும் உண்டு. இந்த விசயத்தில் பி டி எப் செய்வது சரி. மற்ற அமைப்புக்கள் வர வேண்டாம் என அவர்கள் ஒருபோதும் தடை செய்யவில்லை. டி சி சி உட்பட இணைந்து இயங்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் தமது வலதுசாரிய அரசியலை விட்டு வர அவர்கள் தயாராக இல்லை. டி சி சி அதே வலது சாரிய அரசியலை தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயட்சிக்கிறதே அன்றி அதை மறுத்த அரசியலை முன் வைக்கத் தயாராக இல்லை. இங்குதான் தமிழ் சொலிடாரிட்டி தனித்துப் போய் நிற்கிறது. போராட்ட அரசியலைச் சமரசம் செய்ய தயாரற்ற சக்திகள் இந்தப் பக்கம் தான் திரள வேண்டும்.
போராட்ட அரசியல் பக்கம் நிற்கிறோம் என்ற வித்தை காட்ட வேண்டாம் என்று டி சி சி தலைமையைக் கேட்டுக் கொள்கிறோம். இதே கதையை அங்கிருக்கும் சில இளையோரை நோக்கிக் கதைக்க முடியாது என எமக்குத் தெரியும். அவர்கள் ‘பழைய தலைமுறையை’ மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் இயங்குகிறார்கள். அது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. போராட்டம் என்ற பேச்சு மட்டும் போதாது நடைமுறை வேண்டும். செயற்பாடு செயற் திட்டத்தில் இருந்து பிறக்க வேண்டும். ‘தலைவர் சொனார்’ – ‘இப்படித்தான் முன்பு செய்தோம்’ என்ற கதைகளைச் சொல்லி அரசியல் கடமையில் இருந்து நழுவி விட முடியாது. மாவீரர் தின உரைகளை மட்டும் வைத்து – புலிகள் அமைப்பின் சில வழிகாட்டிகளை மட்டும் வைத்து புதிய போராட்டத்தை கட்டி விட முடியாது என்ற அடிப்படை அறிதல் கூடவா இல்லை? அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. தற்போதைய தெற்காசிய நிலவரங்கள் முற்றிலும் புதிய நடைமுறை. இதை உள்வாங்காமல் –அதற்கேற்ற படி அரசியல் நடவடிக்கைகளை முன் எடுக்காமல் நாம் சரியான திசையில் நகர முடியாது.
5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள்.
ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் சொலிடாரிட்டி ஊக்குவிப்பதில்லை. டி சி சி யில் இருக்கும் சிலருக்குத்தான் அது கைவந்த கலை. இவர்கள் கூட்டங்களில் செய்யும் அடாவடித் தனங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பும் நோக்கத்தோடு தோழர்கள் கலந்து கொள்ளவும் இல்லை – அந்த நோக்கத்தில் இயங்கவும் இல்லை. அப்படி நோக்கில் சென்றிருப்போமாயின் கொடிகளை இழுத்து விழுத்தி கை கலப்பில் ஈடு பட்டிருக்க வேண்டி வந்திருக்கும். அந்த திட்டம் எதுவும் இருக்கவில்லை. அத்தகைய தவறான காரியத்தை நாம் செய்யப் போவதில்லை. பிரித்தானிய கொடியை ஏற்றுவது பற்றி உரத்து எமது எதிர்ப்பை தெரிவித்தோம். உடனடியாக எம்மை எதிர்க்க வந்தவர்கல்தான் வன்முறை கதைகள் பேசினார்.
ஒருவர் கொலை மிரட்டல் விட்டார். மற்றவர் உரத்துப் பேசி முறைத்து முடக்க முயற்சித்தார். இவ்வாறு பல்வேறு மிரட்டல் கதைகளுக்கு மத்தியில் தமிழ் சொலிடாரிட்டி தோழர்கள் தொடர்ந்து தமது அரசியல் நிலைப்பாட்டையும் – ஏன் நாம் பிரித்தானியக் கொடியை எதிர்க்கிர்றோம் என விளக்கிக் கொண்டிருந்தனர். அச்சத்தில் யாரும் பதுங்கி நிற்கவில்லை. ஆனால் அரசியலை மறைக்காது விளக்க முயற்சித்தோம். உங்களைப்போல் நாம் வன்முறை பேசவில்லை. எமக்கு அரசியற் பயிற்சி உண்டு. தமிழ் சொலிடாரிட்டி பிரித்தானிய தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர் அமைப்புக்களோடு நெருங்கிய உறவு உள்ள ஒரு பலமான அமைப்பு. எம் மேல் பேச்சலவிலோ –செயலிலோ வன்முறை காட்டி விட்டு வீட்டில் போய் நிம்மதியாய் குந்தி இருக்கலாம் என கனவு காணாதீர்கள். இது பற்றி பல அனுபவங்கள் உள்ள ‘தலைமைகள்’ தம் ‘தொண்டர்களுக்கு’ பயிற்சி கொடுக்க வேண்டும்.
பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள். தமிழ் சொலிடாரிட்டி எதையும் ஒழித்து மறைத்துப் பேசுவதில்லை. மக்களுக்கு உண்மை சொல்லி அரசியல் செய்வோர் நாம். அதை விட்டு விட்டு தொலைபேசி அடித்து பொய் பரப்புதல் – மிரட்டுதல் போன்ற விளையாட்டுகளைக் காட்டாதீர்கள். தமிழ்நாட்டுத் திராவிடத் தலைமைகள் செய்யும் சாக்கடை அரசியலை இங்கு அறிமுகம் செய்ய முயலாதீர்கள். மனதில் உறுதியும் நேர்மையும் அரசியல் தெளிவும் இருப்போருக்கு இத்தகைய சில்லறை உத்திகள் தேவை இல்லை. முடிந்தால் அரசியல் விவாதத்தை செய்து உங்களைச் சரி என நிருபித்துக் காட்டுங்கள். அனைத்து அரசியல் பிற்போக்குத் தனங்களையும் – அரசியற் சமரசங்களையும் மக்கள் முன்னாள் பேசிக் கொண்டுத்தான் இருக்கப் போகிறோம். இது போல் இன்னும் பல கேள்விகள் வரத்தான் போகிறது. எதை ஏற்றுக் கொள்வது என்பதை சனநாயக ரீதியாக மக்கள் முடிவெடுக்கட்டும். அமைப்புக்களைச் சுற்றி நிற்கும் ஒரு சிலர் அந்த முடிவை எடுக்க முடியாது.
உண்மையில் இன்று எல்லாப் புலம் பெயர் அமைப்புக்களும் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். தமது சொந்த அரசியற் கூட்டத்துக்கு ஒரு நூறு பேரைக் கூட இலகுவாக திரட்ட முடியாத நிலைதான் இன்று இருக்கிறது. முக்கிய நாட்களில் சிறுபான்மை மக்கள் தமாகத்தான் திரள்கிறார்கள். இந்த நிகழ்வை கைப்பற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாக காட்ட முயல்வது தவறு. இந்த நிகழ்வுகள் எல்லா மக்களுக்குமானது. எந்த அமைப்பு அதை ஒழுங்கு செய்தாலும் எல்லா அமைப்புக்களுக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டை முன் வைக்க உரிமை உண்டு. உங்களின் அரசியலுக்கு ஆதரவைத் திரட்ட மக்கள் மத்தியில் வேலை செய்யுங்கள் – பிரச்சாரம் செய்யுங்கள் – திரட்டுங்கள். அதிகாரத்தின் மூலம் – அல்லது குறுக்கு வழியில் ஆதரவைத் திரட்டுவது சாத்தியமில்லை.
5
எல்லாப் பிரச்சினைகளுக்கும் தாய், தந்தை – அரசியல் போதாமைதான்.
தமிழ் சொலிடாரிட்டி தோழர்கள் மேல் வைக்கப் பட்ட அவதூறுகளுக்கு மத்தியில் அவர்கள் முன் வைத்த அரசியற் கேள்விகளுக்கு பதிலாக வந்த பொன் மொழிகள் சிலதைப் பார்ப்போம்.
‘ நீங்கள் சிட்டிசன்ஷிப் எடுக்கேக்க்க கை கட்டிக் கொண்டு நின்றுதானே எடுத்தனிங்கள்’
‘முதலில் உங்கடை புத்தகத்தை (பாஸ்போர்ட்) கிழிச்சுப்போட்டு ஊருக்குப் போய் சேருங்கோ. அங்க போய் கட்டுங்க உங்கட போராட்டத்த’
‘வழமையா நாங்க ஏத்திர கொடியத்தான் ஏத்திறம்’
‘இது எங்கள் நாடு. எங்களுக்கு பி.ஆர் தந்திருக்கிற நாட்டின் கொடி இது. நீ வேணுமெண்டா முதலில் உன்ர பி.ஆரக் கிழி’
‘இந்த நாட்டில உங்கள இருக்க விட்டவங்கள் தானே – இந்த நாட்டு சட்டத்த பாலோ பண்ணோணும்’
‘நீங்கள் எப்ப போராட்டத்துக்கு வெளிக்கிட்டனியள். நாங்க அந்த டைமில இருந்து போராடுறம்’
‘நாங்க தலைவரின் கைஏடுப்படி இயங்கிறம்’
இது தவிர நிகழ்வுக்குப் பிறகும் பலர் சமூக வலைத்தளங்களில் இது போன்ற அரசியல் அடிப்படை தெளிவற்ற பல்வேறு பொன்மொழிகளைப் பரப்பி வந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது.
தேசிய அரசுக்கு விசுவாசமாயிருத்தல் என்ற அடிப்படையில் எந்த ஒரு நாட்டிலும் போராட்ட சக்திகள் இயங்க முடியாது. தேசிய அரசு –அதன் இலட்சினைகள் –மற்றும் தேசிய அரசு சார் நிறுவணங்கள் – அனைத்தும் இணைந்ததுதான் அரசதிகாரம். ஒரு தேசிய அரசின் அதிகாரம் சமூகத்தில் முதன்மை பலத்தை வைத்திருப்பவர்கள் நலன் சார்ந்தே இயங்குகிறது. பெரும் மூலதனப் பலத்தை முரண் நிலையில் வைத்து இயங்கும் அரசு எங்காவது உண்டா? அவ்வாறு ஓரளவாவது மக்கள் நலன் சார் கொள்கைகள் உள்ள ஒரு சக்திக்கு அரசதிகாரம் மாறும்போது அவர்கள் எத்தகைய எதிர்ப்பை நாட்டுக்குள்ளும் –வெளியிலும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்பதை வரலாறு முழுவதும் பார்க்கிறோம். ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் நலன் என்பது தேசிய அரசின் முதன்மை நலனுக்கு எதிர் திசையிலேயே இயங்குகிறது. பெரும்பான்மை மக்களின் நலனில் இயங்கும் பண்பு தேசிய அரசுகளுக்கு கிடையாது. குறைந்தளவு உரிமைகளை வழங்குவது – தேர்தலை நடத்துவது என்ற நடைமுறைகளோடு ‘சனநாயகம்’ முடங்கிக் கிடக்கிறது. மக்களின் ஒட்டு மொத்த தேர்வை தேர்தல்கள் பிரதிபலிப்பதில்லை. (அரசு, அதிகாரம், மக்கள் ஆகியவற்றுக்கிடையிலான உறவு பற்றி மார்க்சிய சான்றோர் நிறைய எழுதி உள்ளனர் – நோம் சாம்ஸ்கியின் இந்த செவ்வியும் சிறிது உதவும் – https://chomsky.info/20050518/)
இதனால்தான் மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவில் திரண்டு போராட வேண்டி இருக்கிறது. 2003ல் யுத்தத்துக்கு எதிராக ஏறத்தாள 3 மில்லியன் மக்கள் லண்டன் தெருக்களில் திரண்டு எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதபோல் தேசிய மருத்துவ சேவையை காப்பதற்காக எனவும் ஏனைய சேவைகளை வெட்டுவதை தடுக்கவும் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள் – போராடி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன (https://www.ons.gov.uk/employmentandlabourmarket/peopleinwork/employmentandemployeetypes/timeseries/bbfw/lms). ஓய்வெடுக்க நேரமின்றி வேலை செய்யும் உழைக்கும் மக்கள் நேரம் ஒதுக்கி போராட வருவது என்பது கனதியான நடவடிக்கை. ஆட்சி மாற வேண்டும் என மக்கள் வாக்களிப்பதன் பின்னணியில் அரசு மேலான வெறுப்பு இருப்பதையும் கவனிக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் குறுகிய தேர்வில் கூட மக்கள் தமது எதிர்ப்பை எவ்வாறாவது பதிந்துவிட முயலும் பண்பை நாம் பார்க்கலாம்.
தேசிய அரசு மக்களுக்கானது என்றால் மக்கள் ஏன் ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது? தானாக அரசால் வழங்கப்பட்ட உரிமை –அல்லது வழங்கப்பட்ட சேவை என ஏதாவது இருக்கிறதா? அரசு சார் வரலாற்று ஆசிரியர்கள் திரித்துத்தான் எழுதுவர். இலங்கையில் வரலாறு படித்த எல்லா தமிழ் பேசும் மக்களுக்கும் இது கேள்விக்கு அப்பாற்பட்ட உண்மை என்பது தெரியும். மருத்துவ சேவையில் இருக்கும் ஊழியர் போராட்டம் இன்றியா டோரி கட்சி மேலதிக முதலீடு செய்வது பற்றி பேசுகிறது? எந்த வலதுசாரிய அரசும் மக்களுக்கான சேவைகளை தாமாக முன் வைத்ததில்லை. மக்களின் போராட்ட அழுத்தம் அல்லது மேலதிக லாபாம் சுரண்டும் நோக்கம் என்ற காரணங்கள் தான் சில கொள்கை அறிமுகத்தின் பின்னணி. அவர்கள் ‘மக்கள் நலனை முதன்மைப்படுத்தல்’ என்ற அடிப்படையில் இயங்குவதில்லை.
இதனால்தான் போராட்ட அமைப்புக்கள் அதிகாரம் சார் இலச்சினைகளை புறக்கணிக்கிறார்கள். தற்போது மக்களுக்கு எதிரான கொள்கைகளை முன்னெடுக்கும் அரசு என்ற காரணத்துக்காக மட்டும் இன்றி வரலாற்று ரீதியான கொடுமைகளுடன் அடையாலப்படுவதாலும் பிரித்தானிய கொடி என்பது போராட்டச் சக்திகளால் – முற்போக்குச் சக்திகாளால் – ஒடுக்கப்படுவோரால் புறக்கணிக்கப் படுகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவித்த ஓன்று (https://www.independent.co.uk/voices/commentators/johann-hari/johann-hari-the-truth-our-empire-killed-millions-404631.html). இந்த வரலாற்றை மறுக்க- அதோடு உடன்பாடில்லை என்பதைக் காட்ட- பிரித்தானிய ஏகாதிபத்திய இலச்சினைகளை முற்போக்காளர் மறுத்து வருகின்றனர். இதனால் இங்கு நடக்கும் உரிமை போராட்டங்களில் பிரித்தானிய கொடி பறப்பதில்லை.
இதே சமயம் கால்பந்தாட்டம், அல்லது ஒலிம்பிக் ஆகிய தேசம் சார்ந்த பிரதிநிதித்துவத்தின் போது பிரித்தானிய இலட்சினைகள் பாவிக்கப் படுவதையும் அதை மக்கள் பொதுவாக ஏற்றுக் கொள்வதையும் பார்க்கலாம். இது ஒரு ‘பழக்கம்’ தவிர சட்ட முறைப்படி நிகழ்வதில்லை. ஒரு குழுவின் பிரதிநிதித்துவத்தை காட்ட இலட்சினை தேவைப்படுகிறது. தவிர ஒட்டுமொத்த மக்களின் நலன் சார்ந்த வெளிப்பாட்டு நடவடிகை அல்ல இது. பிரித்தானிய கொடி இன்றியும் ஒலிபிக்கில் கலந்து கொள்ள முடியும்.
ஆனால் தீவிர தேசிய வாதிகள் – மற்றும் தீவிர வலதுசாரிகள் – துவேசிகள் – பாசிஸ்டுகள் ஆகிய மக்கள் விரோத சக்திகள் கொடியை முதன்மைப்படுத்தி அரசியல் செய்வதை நீங்கள் பார்க்கலாம். இன்று பிரித்தானியக் கோடியை அதிகம் பிடிப்பதும் அதன் புனிதம் பற்றி அதிகம் பேசுவதும் பெரும்பாலும் துவேசிகளே. பிரித்தானியக் கொடியை பிடித்தபடி – குறிப்பாக சென் ஜார்ஜ் கொடி பிடித்தபடி- தெருவில் யாராவது போராட என்று நின்றால் அங்கு ஏதோ துவேசிகள் போராட்டம் நடக்கிறது என்ற என்னத்துக்கு நீங்கள் வரலாம். இது ஒரு பொது அறிவாக இன்று இருக்கிறது. இதனாலும்தான் இந்தக் கொடியை பிடிக்காதீர்கள் எனச் சொல்லுகிறோம். அதுவும் போராட்டச் சக்திகள் எனச் சொல்லிக் கொள்வோர் இதைச் செய்வது வெட்கக் கேடான விசயம்.
இதைவிட உங்களுக்குத் தெரிய வேண்டிய நிறைய விசயங்கள் உண்டு. பிரித்தானியக் கொடி சட்டப்படி உருவாக்கப் பட்டதோ அல்லது அக்கொடியை அசிங்கப்படுத்துவது சட்டப்படி குற்றமோ கிடையாது. இது தவிர இக்கொடி வேல்ஸ் பகுதியை உள்வாங்கவில்லை என்ற பெரும் விவாதமும் நடந்து கொண்டிருகிறது. அதே சமயம் வட அயர்லாந்து கத்தோலிக்க மக்கள் இக்கொடியை தமக்கு எதிரான இலட்சினையாக பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக இக்கொடி ஒடுக்கும் அடையாளமாக பாவிக்கப் பட்டு வருகிறது. அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் கடுமையாக வெறுக்கப்பட்ட கொடி பிரித்தானியக் கொடி. இன்றுவரை இந்த உணர்வு முழு அயர்லாந்திலும் தொடர்ந்து வருகிறது.
6
‘அரசு அகதி அந்தஸ்து தந்தது – எங்களை இங்கு வாழ விட்டிருகிறார்கள்’ என்ற சென்டிமென்டல் வாதத்துடன் இங்கிலாந்து அதிகார சக்திகளுக்கு அடிமையாக இருக்கக் கோருவதும் மிகுந்த அரசியல் பலவீனத்தை வெளிபடுத்திக் காட்டுகிறது. அகதிகளுக்கான உரிமைகள் உட்பட பல்வேறு மணித உரிமைகள் அரசால் வழங்கப் படுவதில்லை. மாறாக இந்த உரிமைகள் மக்கள் போராட்டங்களால் வென்றெடுக்கப் பட்டவை. சமீபத்தில் விட்ன்ரஷ் பிரச்சினையின் போது வெளியான விசயங்களை நீங்கள் படித்தறிந்து கொள்ளவேண்டும் (பார்க்க https://www.youtube.com/watch?time_continue=1144&v=_rfErL6m0pk). உரிமைகள் வழங்கப் படுவதில்லை – வெல்லப்படுபவை. நீங்கள் ‘நன்றியாக’ இருப்பதாயின் உங்கள் நன்றி போராடிய மக்களை நோக்கியதாக இருக்கவேண்டுமே தவிர உரிமைகள் வருவதை எதிர்த்த அரசு – வலது சாரி கட்சிகள் நோக்கியதாக இருக்க முடியாது. எமது உரிமைக்காக போராடிய சக்திகளை புறந்தள்ளி விட்டு –அந்த உரிமைகள் வழங்கப்படுவதை எதிர்த்த சக்திகளுக்கு விசுவாசத்தை கோரும் அரசியல் அறிதலை என்ன சொல்வது? போரட்டங்களை முன்னெடுத்த தொளிற்சங்கம் நோக்கி உங்கள் நட்பு விரிந்ததுண்டா? இது மிகப் பலவீனமான பார்வை. போராட்ட சக்திகளாக தங்களை பார்க்காத மன நிலையில் இருந்து இது எழுகிறது. அதுதான் உண்மை. நீங்கள் போராட்ட சக்தியாக அடையாள பட விரும்பவில்லை –அதிகாரத்தின் மேல் இருக்கும் மோகமே உங்களுக்கு முதன்மை உணர்வாக இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் அதிகாரத்தின் நட்பை தேடும் உங்கள் உட்கிடக்கைதான் இப்படி பேச வைக்கிறது.
இங்கிலாந்தில் பல தலைமுறை வாழும் ஒரு பிரசைக்குரிய அனைத்து உரிமையும் புதிய பிரசைகளுக்கு உண்டு. இந்த உரிமையை பாதுகாக்கும் சட்டங்களும் வென்றெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்த நாட்டு அதிகாரம் மக்களை ஒடுக்குவதை எதிர்த்துக் கேட்கும் உரிமை இந்த நாட்டு அனைத்து பிரசைகளுக்கும் உண்டு. நீங்கள் அந்த உரிமையை பாவிக்காது அதிகாரத்தில் சூடு காயலாம் – அல்லது தொடர்ந்து அடிமை உணர்வில் பதுங்கி வாழலாம். ஆனால் புதிய தலைமுறை தமிழ் பிரித்தானியர் தமது உரிமைகளை கோருவதையும் – அதற்காக போராட்ட உணர்வோடு இயங்குவதையும் உங்களால் தடுக்க முடியாது. இங்குள்ள போராட்டச் சக்திககளோடு இணைந்து – உழைக்கும் மக்களின் குரலோடு இணைந்து இயங்க தமிழ் பிரித்தானிய பிரசைக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
பிரித்தானிய அதிகாரத்தை ஆத்திரப்படுத்திவிடக் கூடாது என்பதுதான் உங்கள் முதன்மை நோக்கம். ‘எப்படியாவது கெஞ்சி மண்டாடி அவர்களை எங்கள் பக்கம் திருப்ப வேண்டும். அவர்களுக்கு நாம் ஆதரவு என காட்டுவதால் அவர்கள் எங்களின் உரிமைகளை மதிப்பர் – வென்றெடுத்து தருவர்’ – என்ற ஏக்கமும் உங்கள் போக்குகளில் இருப்பது தெரியும். ஆனால் இது மிகப் பெரும் அரசியல் தவறை நோக்கி நகர்த்தும் நடவடிக்கை – சிந்தனை. போராட்ட சக்திகளை ஒட்டு மொத்தமாக முறியடிக்கும் நோக்குள்ள அதிகாரத்தோடு இணைந்தோ அல்லது – ஒட்டி உறவாடியோ இயங்குவதன் மூலம் அந்தப் போராட்ட சக்தி மேலதிகமாக பலவீனம் அடையுமே தவிர ஒருபோதும் தனது இலக்கை நோக்கி நெருங்கப் போவதில்லை. இந்த அடிப்படை அறிதல் இன்றி அரசியற் போராட்டத்தை கட்ட முடியாது.
இங்குள்ள போராட்டக் காரர்களை ‘ஊருக்கு போங்கள்’ எனப் பேசுவது –இலங்கை அதிகாரத்துக்கு அதரவான பேச்சு எனபாத்து கூடவா உங்களுக்குப் புரியவில்லை? சும்மா பகிடிக்கு கதைச்சம் என பகிடிகள் விட வேண்டாம். உங்களின் ஒட்டுமொத்த அரசியன் பலவீனத்தின் வெளிப்பாடுகள் இந்தக் கதைகள். பாஸ்போர்ட்டுக்கு விசுவாசமாக இருந்து கொண்டா அங்கு போராட்டம் கட்டப் பட்டது. எந்த நாட்டில் இருந்தாலும் போராட்டச் சக்திகளின் பண்பு என்பது ஒன்றுதான். தேசிய எல்லைகளை போட்டு உலக மக்களை பிரித்து ஆழும் மூலதனத்தின் அதிகாரம் உடையும் பொழுது மீண்டும் எல்லைகள் மாறும் – இல்லாமல் போகும். மனிதர்களுக்கான உரிமைகள் என்பது வெவ்வேறு எல்லைகளுக்குள் வெவ்வேறு முறையில் முடக்கப்படுவதல்ல. மாறாக மனித உரிமை உலகளாவியது.
இன்னுமொரு முக்கியமான நடவடிக்கையை –பேச்சை ‘பழைய’வர்கள் கைவிட்டு ஆக வேண்டும். ‘உனக்கென்ன போராட்டம் தெரியும்?’ – ‘நாங்கள் அந்தக் காலத்தில் இருந்து போராடுறம்’ – போன்ற மிரட்டல்களை புதிய தலைமுறையினர் நோக்கித் திருப்புவதை கைவிட்டு ஆகவேண்டும். புதிய தலைமுறையினர் அரசியரற் போராட்டத்தை தூக்க வேண்டும் என வாய் கிழியப் பேசுபவர்களும் இதை செய்கிறார்கள். உங்களுக்கு என்ன தெரியும் என மட்டம் தட்டுகிறார்கள். பிந்திப் பிறந்தது ஏதோ அவர்கள் பிழை மாதிரியும் – அடிபணிந்து நடப்பதே அவர்கள் நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்ற அதிகாரத் தோரணையில் இது நிகழ்கிறது. அவர்கள் சொந்த மூளையை பாவிக்கத் தேவை இல்லை – மாறாக சொல்வதை செய்தால் சரி என்ற எடிப்படையில் நடவடிக்கைகள் குறுக்கப் படுகிறது. தயவு செய்து இதை கைவிடுங்கள். புதிய தலைமுறை பிள்ளைகள் பேசும் அரசியலை புரிந்து கொள்ளும் ஆளுமையோ – அல்லது அவர்களை வழிநடத்தும் அரசியல் தெளிவோ இல்லை என்றால் ஒதுங்கி நில்லுங்கள். பிரித்தானியாவில் நிகழும் அரசியல் மாற்றங்களில் இருந்து பிரித்து அந்த புதிய தலைமுறையினரை அணுக முடியாது என்ற அடிப்படை புரிதல் கூட இன்னும் இல்லாதவர்களின் தொல்லைகள் நிறுத்தப்படவேண்டும். உங்களின் அறிதல் எல்லைக்குள் அரசியல் நடவடிக்கைகளை முடக்கி வ்சைத்திருப்பதன் மூலம் நீங்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயல்கிறீர்கள். சிறிய அளவில் இந்த கட்டுப்பாட்டை காத்துக் கொள்ள முடியும். ஆனால் இம்முறையில் புதிய தலைமுறையை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்க வரலாறை திரித்து புனிதப்படுத்தல் மூலம் மேலதிகத்தை எடுக்க முனைதல் – மற்றும் விடுதலிப் புலிகள் மற்றும் அதன் தலைமைக்கு அப்பால் அரிசியல் அறிதல் இல்லை என்ற கடும் பார்வையில் இயங்குவதன் மூலம் மக்கள் மேல் அதிகாரத்தை காத்துக் கொள்ள முடியும் என்ற கனவு காணுதல் – இதுவும் எம்மவர்கள் சிலர் மத்தியில் இருக்கும் இன்னுமொரு வியாதி.
எந்த ஒரு போராட்ட இயக்கமும் அரசியல் அறிதலின் முழுமையை அடைந்து விட்டதாக கருத முடியாது. மிகப் பலவீனமான அரசியல் பற்றிய அடிப்படை புரிதலற்ற அமைப்பினர்தான் தங்களை அறிதலின் முழுமையாக காட்டிக் கொள்வர். உலக நடவடிக்கைகள் தொடர் மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டிருப்பவை. சமூகம் சார்ந்த அடிப்படை உறவு முறைகள் மற்றும் சில அடிப்படை இயற்கை நடவடிக்கைகள் பற்றிய பல தத்துவங்கள் எமது அறிதலுக்கான அடிப்படையை எட்படுத்தித் தர வல்லன. ஆனால் அவையும் முழு அறிவல்ல. இது தவிர அரசியல் நடவடிக்கை மற்றும் –அரசியல் முன்னோக்கு முதலான விசயங்களில் எந்த ஒரு தமிழ் அமைப்பும் பலமாக இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புக்களிளும் பல்வேறு அரசியற் போதாமை இருந்ததை நாம் பார்க்க முடியும். இதை நாம் கற்றுக் கொள்வதும் –அத்தகைய பலவீனங்களைத் தாண்டிய போராட்ட சக்தியை கட்டி எழுப்ப வேலை செய்வதும் அவசியம். புலிகள் இயக்கத்தின் ‘அரசியற் புனிதத்தை’ காத்துக்கொண்டு இதை ஒருபோதும் செய்து விட முடியாது.
‘தலைவர் சொன்னவர்’ – ‘தலைவரின் கையேட்டில் இருக்கு’ போன்ற வாதங்கள் எல்லாம் ஒரு அரசியல் பார்வை அல்ல. கையேட்டில் அவ்வாறு பிழையாக இருப்பின் அதை மாற்றுங்கள். புத்தர் சொனார் – இயேசு சொன்னார் என மத வாதிகள் இயங்க முடியும். ஆனால் அரசியற் போராட்டக்காரர் அவ்வாறு இயங்க முடியாது. அரசியல் நிலைப்பாடு என்பது புறநிலை மாற்றங்களை உள்வாங்கி தெளிவான முன்னோக்கு சார்ந்து செல்ல வேண்டும். எந்த ஒரு தனி மனிதாலும் அனைத்து விசயங்களிலும் சரியான நிலைப்பாட்டை எடுத்து விட முடியாது. அரசியல் தெளிவு என்பது தெளிவான கொள்கை – தூர நோக்குப் பார்வை உள்ளவரின் குளுவான பார்வையாக இருக்கும் பொழுது அதன் வீரியம் – சரித்தன்மை அதிகரிக்கிறது. குறுகிய வாதங்களுக்குள் அரசியலை – அரசியல் நடவடிக்கைகளை முடக்க நினைக்காதீர்கள்.
மக்கள் மத்தியில் இயங்கும் போராட்ட சக்திகள் மத்தியில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதே இந்த விமர்சனங்களை – கருத்துக்களை நாம் முன் வைக்க காரணம். தம்மை போராட்ட சக்திகளாக பார்க்காதோர் நோக்கி நாம் பேசவில்லை. அதே சமயம் தம்மை போராட்ட சக்திகள் என அடையாள படுத்துவார்கள் நோக்கி நாம் கார சாரமான விவாதத்தை நடத்தவும் –அதன்மூலம் சரியான போரட்ட அரசியல் நிலைப்பாடு நோக்கி போராட்ட சக்திகளை நகர்த்தவும் நாம் முயல்கிறோம். அந்த நோக்கம் தான் முதன்மை. இங்கு எந்த தனிப்பட்ட தாக்குதல்களும் நாம் செய்யவில்லை. அரசியல் விவாதத்துக்குத்தான் அழைக்கிறோம். தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விவாதத்தை எதிர்கொள்ள இரு முக்கிய வழமைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. பூனை பால் குடிப்பதுபோல் சொலிரவன் சொல்லட்டும் என கண்ணை மூடிக்கொண்டு தொடர்ந்தும் குருட்டுப் பாதையில் பயணிப்பது ஒரு வழி. தனி நபர் தாகுதல்களில் இறங்கி விவாதத்தின் திசையைத் திருப்புவது இன்னொரு வழி. இதற்கு அப்பால் இயங்க முன்வருபவர்கள் – ஒரு அரசியற் போராட்டத்தை கட்ட வேண்டும் என சிந்திப்போரை நாம் எம்முடன் உரையாடலுக்கு அழைக்கிறோம். வாருங்கள்.